தென்றல் (Thendral)

Monday, February 10, 2014

இந்துக்காவலர்களின் இரட்டைவேஷம்........

சொந்த மகன் கிரீன்கார்டு வாங்கினா சாதனை!

இளையராஜா மகன் கிரீன் குல்லா போட்டா வேதனை!!

என்னங்கய்யா உங்க நியாயம்?

யுவன் சங்கர் ராஜா என்கிற தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் முதலில்ஓரு திருமணம் செய்துகொண்டார். ஏனோ அவர் பிறகு அந்த திருமண பந்தத்தில் இருந்து விலகி விவாகரத்து பெற்றார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் வாழ்க்கையை அவர் பாட்டுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது பெரிய விவாதமாகவில்லை. சமூகமும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

ஆனால் நேற்று அவர் பிறக்க நேர்ந்த மதத்திலிருந்து விலகி, இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டதைப் போல இயல்பானதாக இருந்திருக்கவேண்டிய அவரது அந்த தனிப்பட்ட தேர்வு, இன்று பெரும் விவாதப் பொருளாகியிருப்பதும், அதை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு பஞ்சாயத்து செய்துகொண்டிருப்பதும் ஒரு விஷயத்தை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அடிப்படையில் தமிழ் சிவில் சமூகம் என்பது, மதம் குறித்த அடிப்படை புரிதல் மட்டுமல்ல, தனிமனித அந்தரங்கம் குறித்த குறைந்தபட்ச புரிதலும் இல்லாமல் இன்னமும் காட்டுமிராண்டி காலத்திலேயே இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

எதிரொலியைப்பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜாவின் மனைவியாக யார் இருக்கவேண்டும் என்பதையும், அவர் எந்த மதம் சார்ந்து இருக்கவேண்டும் என்பதையும் முடிவு செய்யவேண்டியவர் அவர் மட்டுமே. அதில் அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களோ மற்றவர்களோ மூக்கை நுழைப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. குறிப்பாக அவர் வீட்டுக்கு வெளியில் இருக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கு இதில் எந்த உரிமையும் சுத்தமாக இல்லை. இல்லவே இல்லை.

இப்படித்தான் தர்மபுரியில் இருந்த இளவரசன் என்கிற ஆண், திவ்யா என்கிற ஒரு பெண்ணை காதலித்தான். அடிப்படையில் இது ஒரு ஆண் பெண்ணுக்கு இடையிலான காதல் என்கிற இயல்பான நிகழ்வு. அதை அப்படியே விட்டிருந்தால் இன்று அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தால் அவர்களுக்குள் மன முறிவு ஏற்பட்டிருந்தாலும் கூட, இருவரும் அவரவர் வாழ்வை அவரவர் தனித்தனியாகவாவது வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். எப்படியிருந்தாலும் இருவருமே உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் தலித் இளவரசன் வன்னியப்பெண் திவ்யாவை காதலிக்கலாமா என்று தேவையே இல்லாமல், வன்னிய ஜாதிவெறியை வைத்து கட்டப்பஞ்சாயத்து அரசியல் வியாபாரம் செய்த கும்பல் இந்த பிரச்சனையில் தலையிட்டது. அதன் விளைவு என்ன என்பது இன்று நம் எல்லோருக்குமே தெரியும். முதலில் திவ்யாவின் தந்தை பலியானார். அடுத்து இளவரசன் அநியாயமாக இறந்தார். பிள்ளைக்குட்டி பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கான துவக்கப்புள்ளியாக திகழவேண்டிய ஒரு திருமணம், இருவீட்டிலும் தலா ஒரு இழவு விழ வைத்தது. அழகானதொரு இளம் குருத்து, கிளை பரப்பாமலே பட்டுப்போனது.

இளவரசன் திவ்யா என்கிற இருவருக்கு இடையில் எந்த உரிமையும் இல்லாமலே தலையிட்டு ஜாதிவெறியர்கள் பஞ்சாயத்து செய்ததன் மோசமான பின்விளைவுகளை தர்மபுரி இளவரசன் கதையில் பார்த்தோம். அந்த அநியாயம் நடந்து சரியாக ஒரு ஆண்டுகூட முடியவில்லை. அந்த விபரீதத்திலிருந்து யாரும் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதை இப்போது இளையராஜா மகனின் மதமாற்றம் குறித்து இணைய பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கும் இந்துமத வெறியர்களின் பதிவுகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அய்யா கட்டப்பஞ்சாயத்து கனதனவான்களே, அவனவன்/அவளவள் எந்த மனைவியுடன் அல்லது கணவனுடன் வாழ்வது அல்லது எந்த கடவுளை கும்பிடுவது அல்லது கும்பிடாமல் இருப்பது என்பது அவனவன் சொந்த பிரச்சனை. அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் சிக்கலுக்கு உள்ளாகிறவர்கள் செல்லவேண்டிய இடம் காவல்நிலையம் அல்லது நீதிமன்றம். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அங்கே போய் பிராது கொடுங்கள். உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதுமுடியாமல் போனால் மூடிக்கொண்டு அவரவர், அவரவர் வேலையை மட்டும் பாருங்கள். யார் யாரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் அல்லது யார் எந்த கடவுளை கும்பிடவேண்டும் என்கிற பஞ்சாயத்துக்குள் செல்வது சமூகத்துக்கு தேவையில்லாத செயல்.

இளவரசனின் ஜாதி மறுப்புக் காதலுக்கு எதிராகவும், இளையராஜா மகனின் மத மாற்றத்துக்கு எதிராகவும் இவ்வளவுதூரம் பொங்கும் ஆட்கள் சமகாலத்தில் நடந்த, இன்னமும் நடந்துகொண்டிருக்கும் இரண்டு சம்பவங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து ஏன் எந்தவிதத்திலும் பொங்க மறுக்கிறீர்கள்?

முதலாவது நிகழ்வு, சிதம்பரம் கோவில் முன்குடுமி தீட்சிதர்கள் தாங்கள் இந்துக்களிலேயே தனிப்பிரிவு என்றும், மற்ற ஆகம விதிகள் அடிப்படைகள் எதுவும் தங்களுக்கு பொருந்தாது என்றும், சிதம்பரம் நடராஜருக்கு தாங்கள் மிக நெருக்கமான செல்லப்பிள்ளைகள் என்றும் எனவே சிதம்பரம் நடராஜர் கோவில் என்பது தங்களின் தனிச் சொத்து என்றும் இந்திய உச்சநீதிமன்றம் வரை போய் வாதாடி அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு சிதம்பரம் கோவில் என்கிற தமிழர்களின் பொதுச் சொத்தை தீட்சிதர்கள் என்கிற கொள்ளை கும்பலுக்கே கொடுத்து விடுங்கள் என்று தீர்ப்பு சொன்னதே, அந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராக ஏன் நீங்கள் யாரும் பொங்கவில்லை?

எத்தனையோ தமிழ் மன்னர்கள், தமிழ் பொதுமக்கள் பல நூற்றாண்டுகளாக கோடி கோடியாய் கொட்டி வளர்த்த, இன்னமும் கொட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் கோவில் என்கிற ஒரு பொது நிறுவனத்தை, ஒரு கொள்ளைக்கும்பல் நாங்கள் மட்டுமே கடவுளின் செல்லக்குழந்தைகள் எனவே அந்த கோவிலை எங்களுக்கு மட்டுமே கொடுங்கள், மற்ற மற்ற இந்துக்களுக்கு இந்த கோவிலில் எந்த உரிமையும் இல்லை என்று நாகூசாமல் சொல்வதும், அதை ஒரு நாட்டின் உச்சநீதிமன்றமே ஏற்பதும் எவ்வளவு பெரிய கேவலம்? எவ்வளவு பெரிய அவமானம்? முன் குடுமி தீக்ஷிதர்கள் தான் நடராஜனின் செல்லப் பிள்ளைகள் என்றால், மற்ற இந்துக்களெல்லாம் யார்? நடராஜனுக்கும் அவரது பக்தர்களுக்கும் என்னதான் உறவு? அதை கேட்க வக்கில்லாத இந்துக்கள் தான் இன்று இளையராஜா மகனின் மதமாற்றத்தை கண்டு பொங்கோ பொங்கென்று பொங்குகிறார்கள். ஏதோ இளையராஜா மகன் ஒருவரின் மதமாற்றம் இவர்கள் சொல்லும் “ஆதியந்தமற்ற அநாதியான” மதமான இந்து மதத்தையே அழித்துவிடும் என்பதைப் போல இருக்கிறது இவர்களின் பிலாக்கனம்.

இறுதியாக, இளையராஜா மகன் என்கிற ஒற்றை மனிதனின் மதமாற்றத்துக்கு எதிராக இவ்வளவுதூரம் பொங்குபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டுக் குடியுரிமையை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டபடி இருக்கிறார்களே, அந்த “இந்தியரின் குடியுரிமை மாற்றத்திற்கு” எதிராக ஒரே ஒரு எட்டு பொங்குங்களேன் பார்ப்போம்? இளையராஜா மகனின் மதமாற்றத்தை எதிர்த்து பொங்குபவர்கள் யாரும் அந்த இந்தியர்களின் குடியுரிமை மாற்றத்துக்கு எதிராக ஒருநாளும் பொங்கவே மாட்டார்கள்.

காரணம் என்ன? இன்று பொங்கோ பொங்கென்று பொங்குபவர்களின் வீட்டுக்குழந்தைகள் தான் இப்படி இந்திய குடியுரிமையை தாமாகவே விரும்பித் தலைமுழுகிவிட்டு, “மிலேச்சநாட்டுக்” குடியுரிமையை கடினமான பரீட்சையெல்லாம் எழுதி பாஸ் செய்து, பல லட்ச ரூபாய் பணமும் கட்டி, கால் கடுக்க கியூவில் நின்று ஏகப்பட்ட ஆவணங்களை பூர்த்தி செய்து, கடவுளுக்கு விரதமெல்லாம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். அப்படிப் பெற்ற வெளிநாட்டு குடியுரிமையை “மணமகள் தேவை” விளம்பரத்தில் இதே இந்துக்கள் பெருமை பொங்க, “மணமகன் கிரீன் கார்டு ஹோல்டர்” என்று கொட்டை எழுத்தில் போட்டு, அதைக் காட்டி கூடுதல் வரதட்சணையும் கேட்கும் கும்பல் தான் இன்று இளையராஜா மகனின் மதமாற்றத்தை கண்டு வானத்துக்கும் பூமிக்குமாய் குதிக்கிறதுகள். என்ன ஒரு நகைமுரண்?

உங்கள் சொந்த வாரிசுகள் கிரீன் கார்டு வாங்கினால் அது பெருமைக்குரிய சாதனை, அதைக்காட்டி மணமகன் விளம்பரத்தில் தம்பட்டமடிப்பீர்கள், அதன் விளைவாக வானத்தில் ஏறி வெளிநாடு போய்விட்டுவந்து, “அமெரிக்கா ரிட்டர்ன்” என்று பெருமைப்பட்டுக்கொள்வீர்கள், ஆனால் அதே இளையராஜா மகன் கிரீன் கலர் குல்லாவுக்குத் தாவினால் எல்லாம் போச்சு என்று ஒரே ஒப்பாரி?

எதுக்கு இந்த இரட்டைவேஷம் இந்துக்காவலர்களே?

No comments:

Post a Comment

ThirukKuRaL