தென்றல் (Thendral)

Wednesday, January 15, 2014

நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு

தமிழரின் புத்தாண்டு 'தை' இல்லை; 'சித்திரை' என்று இப்போதும் மறுப்பவர்கள் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள். வரலாறு அறியாத இவர்கள் ஆரியர்களின் சூழ்ச்சியை கேள்விக்குட்படுத்துவதற்கு பதில் பெரியாரையும், திராவிட ஆதரவாளர்களையும் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள். இவர்கள்தான் 'தமிழர்களின் விரோதி' என்கிறார்கள். இனஎதிர்ப்பு சொல்லுக்காக ஆரிய இனத்திற்கு எதிராக திராவிட இனத்தை முன்னிருத்தி அரசியல் போராட்டத்தை நடத்திய பெரியார், தமிழர்கள் ஆரிய அடிமைகளாய் கிடந்த காலங்களில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த கடுமையாக ஆரியர்களுக்கு எதிராய் போராடிக் கொண்டிருந்தார். "இந்த ஆரியர்கள், நம் நாட்டைத் “தமிழ்நாடு” என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இனி நம்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும். தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலை நிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன" என்று பொது மேடைகளில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். "தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்" என்றார் பெரியார். அதேப்போல் தமிழர் புத்தாண்டு தினம் 'தை'யை ஆரியர்கள் சித்திரையாக மாற்றியதையும் கடுமையாக விமர்சித்தார். பின்னாளில் திராவிட கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய போது அப்போதைய அண்ணா தலைமையில், 14.01.1969 - இல் அறிஞர் அண்ணா தமிழ்நாட்டு என்று தமிழர் மாநிலத்திற்கு பெயர் சூட்டியது. அப்போது கடுமையாக எதிர்த்தவர்களும் இதே ஆரிய கூட்டங்கள்தான். அப்போது யார் தமிழர்களுக்கு எதிரிகளாய் இருந்தார்கள்? தமிழர்களின் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கூடாது என்று தடுத்தது யார்? ஆரியனா? திராவிடனா? இன்று வரலாறு தெரியாதவர்கள் திராவிட ஆதரவாளர்களை இனத்துரோகிகள் என்கிறார்கள். பொங்கல் தமிழர்களின் பண்டிகை என்றால் இல்லை அது இந்துக்களின் பண்டிகை என்கிறார்கள். தை தமிழர்களின் புத்தாண்டு தினம் என்றால் இல்லை சித்திரைதான் புத்தாண்டு என்கிறார்கள். இந்த வேளையைத்தான் நெடுங்காலமாய் ஆரியம் செய்து கொண்டிருக்கிறது. அதேப்போல் திராவிட கட்சி தை மாதம் தமிழர்களின் புதுவருட தினமாக அறிவித்தது அது பார்ப்பன கட்சியின் தலைமையால் மீண்டும் சித்திரைக்கே மாற்றப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டு அரசியல். பெரியாரியல் தமிழர்களுக்கு எதிரானது இல்லை. ஆரியத்திற்கு எதிரானது என்பதால் எப்போதுமே பெரியாரில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. பெரியார் தமிழர்களுக்கு எதிரானவராக சித்தரிக்க எடுக்கப்படும் சூழ்ச்சியுரைகளுக்கு ஆரிய அடிமைகள் பலியாகலாம். தன்மானமிக்க தமிழர்களை ஒன்றும் செய்துவிட முடியாது. "ஆரிய அடிமைகள், திராவிடத்தை தமிழர்களுக்கு எதிராய் முன்னிருத்தி ஆரியத்தை ஆதரித்து சுய இனத்தின் துரோகிகளாய் வாழும் வாழ்வையும் நாம் வாழ்வென்பதா? ச்சே.. ச்சே... நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்ற புரட்சிக்கவி வார்த்தைகளைத்தான் நாம் மீண்டும் இங்கே ஆரிய அடிமைகளுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. - தமிழச்சி

No comments:

Post a Comment

ThirukKuRaL