தென்றல் (Thendral)

Thursday, January 23, 2014

ஓநாய் சைவமாகிவிட்டேன் என்று கூறினால், நம்பலாமா?

ஊன்றி படித்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள் தோழர்களே...

எங்காவது ஓநாய் சைவமாகிவிட்டேன் என்று கூறினால், நம்பலாமா? அதுபோலத்தான் மோடி ராக மாற்றங்களும்கூட!

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி லோக் புருஷர் என்றும், யுகப் புருஷர் என்றும் திட்டமிட்டு விளம்பரம் செய்வதில் இளைஞர்கள் ஏமாந்துவிடக் கூடாது; குஜராத்வளர்ச்சி பற்றி நோபல்அறிஞர் பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறும் கருத்துகளைக் கவனிக்க வேண்டும்.இணையதளப் பொய்ப் பிரச்சாரம் கண்டு இளைஞர்கள் ஏமாறக்கூடாது!

18 வயது நிறைந்த புதுவெள்ளம் போன்ற வாக்காளர் களான இளைஞர்களுக்கு, இணைய தளமே பெரிதும் அவர்களின் புழக்கமாக இருப்பதை ஒரு வாய்ப்பாக அமைத்துக் கொண்டு, மோடிபற்றி எவ்வளவு பெரிய படத்தை வரைய முடியுமோ அதை வரைந்து, இளைய தலைமுறையின் வாக்கு வங்கியைப் பறிக்க, திட்டமிட்டே செயலாற்றுகின்றனர்.

மோடி அண்மைக்காலப் பிரச்சாரத்தில் இராமர் கோவில், சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிராகப் பேசுவதை (தற்காலிகமாக) நிறுத்திவிட்டு, நாட்டின் வளர்ச்சி, Growth & Development பற்றியே பேசி வருகிறார்!

அவரது பேச்சுகளைத் தயாரிக்க ஆர்.எஸ்.எஸ். ஆர்க்கெஸ்ட்ரா ஒன்று, எப்போதும் ஓய்வறியாது பணியாற்றி வருகிறது!

அவர் இராமர் கோவில் கட்டுவதைப்பற்றியோ, சிறுபான்மையினர்பற்றியோ பேசவில்லை என்பதை அவரிடம் வந்துள்ள மாற்றம் என்று எவராவது கருதினால், மிஞ்சுவது ஏமாற்றமேயாகும்!

அது ஒரு வகையான உத்தி; தேர்தல் காலங்களின் சந்தர்ப்பவாத ஒப்பனைகள் அவ்வளவே!மோடி என்பவர் ஆர்.எஸ்.எஸ். கையில் கிடைத்துள்ள இந்துத்துவாவைப் பரப்புவதற்கான ஒரு கருவியே தவிர வேறில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

எப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஒரு திறந்த திட்டம், மறைந்துள்ள திட்டம் என்ற இரண்டினை வைத்திருப்பது உலகறிந்த ரகசியமாகும்!(Open Agenda and Hidden Agenda).

பா.ஜ.க. முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி பேட்டி ‘Economic Times ஏட்டில் 22.1.2014 அன்று வந்துள்ளதில் அவர் கூறுகிறார். இராமர் கோயில், மைனாரிட்டி பிரச்சினை உள்பட எதையும் நாங்கள் விட்டுவிடவில்லை.

தேர்தல் அறிக்கையினைப் பாருங்கள் என்று ஓங்கி அடித்துக் கூறுகிறாரே!

கறுப்புத் துண்டு போட்டுக் கொண்டு, அய்யா, அண்ணா பெயரை வைத்துள்ளவர்கள் மோடி ராகம் வாசிக்க இப்போதே தொடங்கியது எதனால் - பதவியாசையைத் தவிர?

‘Economical Political Weekly என்ற பிரபல அரசியல் பொருளாதார ஆய்வு வார ஆங்கில (28.12.2013) இதழில், சில மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதுகூட மோடி அலையால் அல்ல என்பதை காரண காரியங்களுடன் விளக்கி உள்ளது.

இவர்கள் ஊதிக் காட்டுவதுபோல, மோடி லோக் புருஷரோ, யுகப் புருஷரோ அல்ல.

அளவுக்கு மீறி நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை அத்வானி அவர்கள் மோடிக்கு இடித்துரைத்திருக்கிறார்!

காங்கிரஸ்காரர்கள் மோடிபற்றிய அதிக விமர்சனங் களைச் செய்யாமல், அவரைத் தங்கு தடையின்றி பேச விட்டாலே, மோடியை மக்கள் புரிந்துகொள்ள, மோடி ராகம் எவ்வளவு மாறினாலும்கூட, அவரது நாக்கும், வாக்குமே வாக்காளர்கள் புரிந்துகொள்ள உதவக்கூடும்.

‪#‎திராவிடர்‬ கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையில் இருந்து; நன்றி: விடுதலை,23-01-2014

No comments:

Post a Comment

ThirukKuRaL