தென்றல் (Thendral)

Saturday, January 25, 2014

அழகிரி நீக்கப்படுவது திமுகவில் புதிதல்ல.

அழகிரி நீக்கம்! தாக்கமும், விளைவுகளும். சில கருத்துக்கள்.

அழகிரி நீக்கப்படுவது திமுகவில் புதிதல்ல. ஏற்கனவே ஒருமுறை நடந்திருக்கிறது. அப்போது அழகிரியின் எதிவினை எப்படி இருந்தது, திமுகவை அது எந்த வகையில் பாதித்தது என்பது குறித்து பார்க்கும் முன் அழகிரியை ஒரு குட்டி முன்னோட்டம் விட்டுவிடலாம்.

1) முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனித்துக் கொள்வதற்காக மதுரைக்கு தலைமையால் அனுப்பப்பட்டவர் அழகிரி. அப்படியே உள்ளூர் கட்சிக்காரர்களின் பழக்கம் ஏற்பட அழகிரிக்கென்ற தனி லாபியும் உருவானது.

2) தகுதிவாய்ந்த கட்சிக் காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவிகளை தன் ஆதரவாளர்களுக்குப் பெற்றுத் தருவதில் அழகிரியை மிஞ்ச யாராலும் முடியாது.

3) மதுரை மீதுகொண்ட தனிப்பாசத்தில் பல நலத்திட்டங்களையும், பாலங்களையும், கல்லூரிகளையும், சாலைகளையும் கொண்டு வந்தவர். மதுரைக்கு ‘டைல்ஸ் நகரம்’ என்ற பெயர் கிடைக்கச் செய்தவர். அவரைச் சுற்றி நல்ல விஷயங்களும் ஏராளமாக உண்டு.

4) தன்னைச் சுற்றி மிக மோசமான ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர் என நல்ல கட்சிக்காரர்கள் புலம்புகிறார்கள். அவர்களைத் தாண்டி அழகிரியை அணுகுவது அகழியைத் தாண்டி மன்னரை நெருங்குவதைப் போன்றது என்கிறார்கள். இதனால் மதுரை வட்டாரத்தில் உள்ள உணர்வுள்ள, உண்மையான கட்சிக்காரர்கள் அத்தனை பேருமே ஒருவித வெறுப்பில் தான் இருக்கிறார்கள்.

5) கட்சிப் பதவியே வேண்டாம் என அமைதி காத்தவர். ஆனால் கட்சி பணித்ததால் பதவிகளை ஏற்றுக் கொண்டார் என ஒரு சாராரும், பிடிவாதம் செய்து பதவிகளைப் பெற்றார் என ஒரு சாராரும் சொல்கிறார்கள். உண்மை அவர்களுக்கே வெளிச்சம்.

திமுகவிற்கு பாதிப்பா?

அழகிரியின் புதிய தலைமுறை பேட்டியைப் பார்த்தவர்களுக்கு அவர் திமுகவின் ஆண் ஜெயலலிதா என்பது புரிந்திருக்கும். விஜயகாந்தை கூட்டணியில் இழுக்க கட்சியின் மேல்மட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, “அவர் வந்தால் உருப்படாது” எனப் பொறுப்பில் இருந்து கொண்டே சொல்ல அழகிரியால் மட்டும் தான் முடியும். (அதில் நியாயம் இருந்தாலுமே கூட) ஆனால் இந்த அடாவடிக் குணம் ’இரு ஆள்’ கட்சியான அதிமுகவில் சரி வருமேயொழிய ஜனநாயகக் கட்சியான திமுகவில் சரி வராது. கூட்டணிக் கட்சிகளை மரியாதையாக நடத்தும் திமுக தலைமை இதுபோன்ற பேட்டிகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவும் கொள்ளாது. அதற்காக கட்சியை விட்டே நீக்க வேண்டியது அவசியம் தானா என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும் தேமுதிக மீதான அழகிரியின் தான்தோன்றி விமர்சனம் என்பதையும் தாண்டி சில முக்கியமாக விஷயங்களைக் கருத்தில் கொண்டே திமுக தலைமை இந்த முடிவை எடுத்திருக்கிறது.

கலைஞருக்குப் பின் ஸ்டாலின் தான் திமுகவிற்கு தலைமையேற்கத் தகுதியானவர், திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்களிடையே செல்வாக்கும் உடையவர் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது. அதனால் தான், ”என்னைக் கேட்டால் ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என அன்பழகன் குறிப்பிட்டார். கலைஞரும் அதை வழிமொழிந்திருக்கிறார். ஆனால் கலைஞரைத் தவிர என்னால் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என திருப்பித் திருப்பி அழகிரி சொல்லிக் கொண்டிருப்பது ஸ்டாலின் ஆதரவாளர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் கூட எரிச்சலடைய வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் அழகிரியின் மனதில் இருக்கும் ஈகோவை பகிரங்கமாக வெளிப்படுத்தும் இது போன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வருங்காலத்தில் வரப்போகும் பிரச்சினைகளை இப்போதே படம்பிடித்துக் காட்டுவதாகத்தான் இருக்கின்றன.

அழகிரி நீக்கத்தை வரவேற்றிருக்கும் திக தலைவர் வீரமணியின் முந்தையகால திமுக எதிர்ப்பு நிலையைக் குறிப்பிட்டு அழகிரி சீறியிருப்பது வியப்பைத்தான் தருகிறது. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர். அவருக்கும் திமுகவிற்கும் நேரடி சம்பந்தம் ஏதும் கிடையாது. கலைஞரை எதிர்க்கவும், அறிக்கையளிக்கவும் அவருக்கு எப்போதும் உரிமை உண்டு. (அதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது தனி விவாதம்). இப்போது திமுகவிற்கு ஆதரவாக, துணையாக, தக்க நேரத்தில் கொள்கைசார் அறிவுரைகளை வழங்குகிறவராக இருக்கும் வீரமணி, திமுகவின் கட்டுப்பாட்டிற்கு பங்கம் விளைவித்தவரான அழகிரியை திமுக நீக்கியதை வரவேற்றுப் பேசியுள்ளதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் வீரமணியின் ஒருகாலத்தைய திமுக எதிர்ப்பைக் குறிப்பிட்டுச் சீறும் அழகிரி, ஏற்கனவே ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது என்ன செய்தார் என நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த 2001 ஆண்டு சமயத்தில் மதுரை முழுதும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த பல திமுக வேட்பாளர்களை 100, 200 ஓட்டுகளில் அதிமுகவிடம் அழகிரி தோற்க வைத்ததை திமுகவினர் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப் பட்டவருக்கு வீரமணியைக் குறை சொல்ல தகுதி இருக்கிறதா!!!!

திமுகவின் வளர்ச்சியில் அதை உருவாக்கிய அண்ணாவிற்கு அதில் இருக்கும் பங்கைப் போலவே அதை இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக் காத்த கலைஞருக்கும் பெரும் பங்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் அண்ணா காலத்தில் திமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட கலைஞர் காலத்தில் ஏற்பட்டவை மிகக் கடினமானவை. மிசாவில் தொடங்கி எம்.ஜி.ஆரில் நீண்டு வைகோவில் இழுத்தவரை திமுக சந்தித்திராத பிரச்சினைகளே கிடையாது. ஆனால் அப்போதெல்லாம் கலைஞரைத் தவிர அங்கே சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என யார் தலைவராக இருந்திருந்தாலும் திமுக காற்றோடு கரைந்து காணாமல் போயிருக்கும். ”வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். ஆனால் எனக்கு போராட்டமே வாழ்க்கையானது.”, எனக் கலைஞர் சொல்வதில் எள்ளளவும் மிகையில்லை. தன் தலைமைப் பண்பின் மேல் யார் யாருக்கெல்லாம் சந்தேகம் இருந்ததோ அதையெல்லாம் அடாவடியின் மூலம் அடக்காமல் தன் செயல்பாட்டால் அடக்கியவர் கலைஞர். திமுகவின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற போது, "கலைஞரை தலைவராக ஏற்க முடியாது" எனப் பேசியவர் தான் அன்பழகன். இப்போது வீரமணி எப்படி அழகிரியின் மீதான நடவடிக்கையை முன்பிருந்தே வற்புறுத்தி, இப்போது நடந்தவுடன் வரவேற்றிருக்கிறாரோ அதே போல பெரியார், அன்பழகன் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். ஆனால் கலைஞர், தன் செயல்பாடுகளின் மூலம்தான் கேள்விகளையும், சந்தேகங்களையும், தன்னை விட வயது மூத்த கழகத் தலைவர்களின் 'ஈகோ'வையும் ஒழிக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு வந்த தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக முந்தைய தேர்தலை விட மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து வந்த சோதனைகளை கலைஞர் எப்படி எதிர்கொண்டார் என்பதை, கூடவே இருந்து பார்த்த அன்பழகன் இன்று கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க முடியாத நிலையில், கலைஞரின் உற்ற தோழனாக  இருக்கிறார். (கலைஞரிடம் இருந்த அந்த பண்பு ஸ்டாலினிடமும் இருக்கும் என நம்புவோம். அன்பழகனிடம் இருந்த பண்பு ஒருநாள் அழகிரிக்கும் வரக்கூடும்.)

 தயாளு அம்மாள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த வரை அழகிரியால் தன் காரியங்களை தாய்ப்பாசத்தால் சாதித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நீக்கத்தால் கோபப்பட்டு மீண்டும் 2001ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியதைப் போல் நிறுத்தினால் திமுகவிற்கு அங்கங்கு கொஞ்சம் அடி விழலாம். மிஞ்சிப்போனால் அழகிரியால் அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் பாராளுமன்றத் தேர்தல் என்பதால் சட்டசபை அளவிற்கு பாதிப்பு இருக்காது என்று நம்பலாம். மேலும் எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அழகிரி திமுகவில் இருப்பது திமுகவிற்கு பலம் தான் என்றாலும் அவர் இல்லாததால் திமுகவிகல்கு எந்த பலவீனமும் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

அதே நேரம் எந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் அசைக்கவல்லது வாரிசுச் சண்டை. திமுகவில் வாரிசுச் சண்டை ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் கலைஞரால் மட்டும்தான் முடியும். அதனால் கலைஞர் நலமாக இருக்கும்போதே வாரிசுச் சண்டை என்ற புண்ணைக் கிளறி மருந்து போட்டு ஆற்றாவிட்டால் வருங்காலத்தில் பெரும் பிரச்சினையாக கண்டிப்பாக மாறும். அதன் தொடக்கமாகத்தான் இன்று அழகிரியின் தற்காலிக வெளியேற்றம் நடந்திருக்கிறது. அதே நேரம் புண்ணை ஆற்றுவதென்றால் கிளறுவதோடு நிறுத்துவதல்ல, புண்ணுக்கு மருந்தாக கலைஞர் நலமாக இருக்கும்போதே ஸ்டாலினை தலைவர் ஆக்கவேண்டும். அது மட்டுமே திமுகவை சமீபகால பின்னடைவுகளிலிருந்து மீட்டு திமுகவினருக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் கூட புது ரத்தமும் நம்பிக்கையும் பாய்ச்சும்.
 நன்றி - டான் அசாக்

No comments:

Post a Comment

ThirukKuRaL