அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. ஒரு வேளை நடந்துச்சுனா..? அதாங்க, 40
தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஜெயிச்சு, ஜெயலலிதா பிரதமர் ஆகிட்டா என்ன
நடக்கும்னு பார்ப்போம்!

வட
மாநிலங்கள் அனைத்துக்கும் இலவச, மன்னிக்கவும்… விலையில்லா ஸ்வெட்டர்,
குளிர்காலத்தில் குளிக்க ஹீட்டர், மற்றும் செம்மறியாடு, ஒட்டகம்னு
கொடுத்திருப்பாங்க.

ரூபாய்
நோட்டில் உள்ள காந்திக்குப் பதிலா எம்.ஜி.ஆர் சிரிக்கிற மாதிரி படத்தை
மாத்தி, அசோகச் சக்கரத்துக்குப் பதிலா இரட்டை இலை சின்னத்தை வெச்சு இது
இரட்டை இலை இல்லை… பறக்கும் சிங்கங்கள்னு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி
இருப்பாங்க.

மெக்சிகோவில்
புயல், சிரியா அமெரிக்கா பிரச்னை, செவ்வாய் கிரகத்துல தண்ணி இல்ல. இது
எல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம்னு பார்லிமென்ட்ல பேசியிருப்பாங்க.
வருகிற ஜூன் (அல்லது) ஆகஸ்ட்டில் இருந்து அந்தப் பிரச்னையெல்லாம் தீரும் என
அமைச்சர் ஒருத்தரை விட்டு சொல்லச் சொல்வாங்க.

அம்மாவோட
பிறந்த நாளுக்கு நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ்
அப்புறம் (மன்மோகனையும் மோடியையும் சேர்த்துக்கலாம்) எல்லாரும் சேர்ந்து
‘வாழ்த்த வயதில்லை தாயே… வணங்குகிறோம்’னு பேனர் வைப்பாங்க.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா சசிகலாவை நியமிச்சு எல்லோரையும் திகில் காட்டியிருப்பாங்க.

தமிழ்நாட்டில் இருக்கிற கொடநாட்டை டார்ஜிலிங்குக்கு மாத்தி குளிர்காலக் கூட்டத்தொடரை டார்ஜிலிங்கில் நடத்தி இருப்பாங்க.

ஒவ்வொரு
ஆண்டு ஆட்சி முடிவின்போதும் ‘உலகம் போற்றும் ஓராண்டுச் சாதனைகள்’,
‘இந்தியா மகிழும் ஈராண்டுச் சாதனைகள்’னு ஃப்ளெக்ஸ் வெச்சுருப்பாங்க.

அமைச்சரவை
மாற்றம் கொஞ்சம் மேலே போய் அடிக்கடி மாநில முதல்வரை மாத்தி இருப்பாங்க.
உதாரணமா கேரளா முதல்வரை காஷ்மீருக்கும் காஷ்மீர் முதல்வரை கர்நாடகாவுக்கும்
மாத்தி இருப்பாங்க.

திருச்சி
ஸ்ரீரங்கம் தொகுதியில் 12 ஏர்போர்ட், 24 ஹெலிபேட், 36 பேருந்து நிலையங்களை
அமைப்பதோடு இந்தியாவின் அடுத்த தலைநகராக திருச்சியை அமைக்க உத்தரவு
போடுவாங்க.

இந்திய
சினிமா 100, உலக சினிமா 100 போன்ற விழாக்களை நடத்தி அந்தந்த மொழியில்
இருக்கிற ‘அம்மா’ புகழ் பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிகர்களை
ஆடிப்பாடச் சொல்லியிருப்பாங்க. அமிதாப்பச்சன் அந்த விழாவில் ‘நான் அமிதாப்
பச்சன் இல்லை, அம்மா பச்சன்’னு திக்கித் திணறி தமிழில் டயலாக் பேசுவார்.

காமெடிக்குக்கூட சினிமாவில் அரசியல் இருக்காது.

இந்தியா
முழுக்க விமான சேவையைத் தொடங்கி, அதற்குப் பச்சை கலர் பெயின்ட் அடிச்சு,
விமானங்கள் பசுமையாக இருந்தால் அழகாக இருக்கும்னு சொல்வாங்க.

வெளிநாட்டு
அதிபர்கள் வீட்டுத் திருமணங்களுக்குப் போய் அங்கே இருக்கிற மக்களுக்குப்
புரிகிற மாதிரி குட்டிக் கதைகள் சொல்லி அப்ளாஸ் வாங்குவாங்க.

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலும், மோடி குஜராத்திலும் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்படும்!
-(உ.சிவராமன் http://www.vikatan.com)
No comments:
Post a Comment